கற்பனை நதியும் கவிதைத் துடுப்பும்!

karpanai-nathiyum-kavithai-thuduppum.img

இருட்டின் விழிகள் போதும்
தெரியும் நிலாவெளிச்சம் போதும்
அந்தக் குளிர்நேரப் பனி போதும்
ஒரு தீக்குச்சியின் அனல் போதும்
கற்பனை மனதின் நதிபோதும்
இந்தக் கால்கள் மட்டுமே போதும்
கவிதை நகரைச் சுற்றி வர…

இது
அலச்சையாய் அம்மணமாய்
அலர்போல கொடியில்
அசைந்தாடும் பொழுது…

இது
புலராதக் காலை வரை
மதுவண்டு மயக்கத்தில்
மகிழ்ந்தாடும் பொழுது…

இந்தப் பொழுது போதும்
எனக்கும் கவிதைக்கும்
இந்தப் பொழுது போதும்
தனிமைக்கும் தாகத்துக்கும்

கற்பனை மனதின் நதிகளிலே
மீன்குஞ்சுகளாய் நீந்தும் ஏக்கங்கள்.
பசியாறத் துடிக்கும் மீன்குஞ்சுகளுக்கு
சில இராப்பொழுதுகள் போதாது!

இந்தப் பொழுதின் கவிதைகள் –
இரண்டு பட்டாம்பூச்சி,
நான்கைந்து வலசைப் பறவைகள்
ஒரு கைப்பிடி வானவில்
தேவைக்கேற்ப பூக்கள்
ஒரு சிட்டிகை மென்சோகம்
தேனீக்கள் இடை இடையில்
அவ்வப்போது,
“கண்ணாடி உவமைகள்”
என்று
நிலாவில் அமர்ந்தபடி
வடைசுடும் பாட்டிப்போல்
சரிவிகிதம் பொருள் சேர்த்துச்
சுட்டுப் போடும்
கவிதைகள் இல்லை.

இந்தப் பொழுதின் கவிதைகளுக்கு
பெய்யும் மழைக்கும்
ஊறும் கண்ணீருக்கும்
வேறுபாடுத் தெரியாது.

இரவின் மழையில்
கற்பனை நதியில்
தானும் கவிதையுமாய்
நனைந்தெழுதும் உணர்வுகள்.

இந்தக் கவிதைகளின் ஈரம்
ஆயிரம் ஆண்டுகளுக்கும் காய்வதில்லை!

நாள்: 22-08-2020

‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!

ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy! 

(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)

Leave a Reply