இரவுப் பிரார்த்தனைகள்…

iravu-praarthanaigal-uyirkaagitham
படம்: ஜெ. அபிநயா (instagram:cleo.arts20)

இரவு நேரத்தில்
எனக்கு
மூன்று மனம்:
ஒரு சிறுவன் மனம்,
ஒரு நாய்க்குட்டி மனம்
ஒரு சிறுமி மனம்

இராத்திரியிலும்
தொடர்ந்துக் கேட்ட
வெடிச்சத்தம்,
தூரத்து
நூரின் வீட்டுக்குள்
விழுந்து
நூரினும் இறந்துப்போனதாய்
அப்துல் சொன்னக் கதை…


தன் வீட்டின்
மாடியிலும்
விழுவது போல் பயந்து,
முகத்தையும் காதையும்
அம்மாவோடு அழுத்திக்கொண்டு,
தலையணையை
உள்ளங்கையில் இறுக்கிப்பிடித்து
“வேண்டாம் வேண்டாம்”
என அழுதுறங்கும்
சிறுவன் மனம்.

இன்று கிட்டிய பிஸ்கட்
நாளைக்கும் வேண்டும்.
அதற்கு
அந்தச் சிறுமி
அதே வீட்டில்
இருக்க வேண்டும்
என்று
நாளையின் மடியில்
கருணை எதிர்ப்பார்த்துச்
சிறுமியைத் தேடும்
நாய்க்குட்டியின் மனம்.

“இன்று வந்த
நாய்க்குட்டி
நாளைக்கும் வரவேண்டும்.
என்னை அது
மறக்காமல்
இருக்க வேண்டும்”
என்று
நாய்க்குட்டியின்
நட்புக்காய் வேண்டும்
சிறுமியின் மனம்.

மூன்று மனங்களின்
மூன்றுப் பிரார்த்தனைகளோடு
என் இரவுகள்
உறங்குகிறது.

‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!

ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy! 

(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)

Leave a Reply