ஆந்தையின் அலறல் படிக்கும் இராவின் தாள்கள்!

Night Owl-Philoscontinuum

என் முழு இரவையும்
முழுங்கிவிடும்
மலைப்பாம்பாய்
என் இரவுகளில்
என்னைச் சித்திரவதைச்
செய்து வரும்
நாளை மீதான
பயம்!

புரண்டுப் புரண்டுப்
படுக்கிறேன்.
கொஞ்சம் கொஞ்சமாய்
முறுக்கி
எலும்புடைக்கின்றன
இரவுகள்!

இந்த இரவுகள்
மற்ற இரவுகள் போலில்லாமல்
மிகவும் நீண்டவை –
“மலைப் பாம்பு போல”.

துடித்துடிக்கிறேன்
அவை முடிவதேயில்லை

ஒரு பயணச்சீட்டுப்
பெற்றுத் தரும்
குறைந்த நேரப்
பயண உரிமைப்போல்
என் நம்பிக்கைகளும்
குறைந்த நேரமே
செல்லுபடியாகின்றன.

காலாவதியான நாட்காட்டியின்
காகிதத்தேதிகள் கிழிக்கப்படுவது
போல
காலாவதியான காலங்கள்
நம் வாழ்வைவிட்டு
அகன்றுவிடுவதில்லை…

நாம் ஒருமுறை
கத்திய குரலின்
எதிரொலிப்
பலமுறை ஓங்கி ஒலிப்பதுபோல்
ஒலிக்கிறது
பழைய நினைவுகள்…

ஒரு மலைக் குகையின்
இருட்டு என் மனதில்
தங்கி இருக்கிறது
மனத்துக்குள் ஆயிரம்
ஒட்டடைகள் அப்பியும்
ஒட்டியும் இருக்கிறது.

திடீரென வரும்
மின்னல் வெளிச்சமோ
விடிந்ததும் வரும்
சூரிய வெளிச்சமோ
எனக்கு வெளிச்சம்
தந்ததில்லை

இந்த மின்னல் வெளிச்சமும்
சூரிய வெளிச்சமும்
ஒருபோதும்
மனதின் இருட்டை
அகற்றாது.

இவ்வளவு கரிசல் மண்ணும்
என்னைப் போன்றோர்
மனதிலிருந்து அள்ளிக்கொட்டியதாகத்
தான் இருக்க முடியும்.
ஆனால், எப்படி?
அழுதா? புலம்பியா?
அங்கலாய்த்தா?

மலைப்பாம்பு
சீக்கிரமாய்
முழுங்கட்டும்…

நாள்: 27-08-2020

‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!

ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy! 

(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)

Leave a Reply